Friday 10 March 2017

இனி நாம் செய்ய வேண்டுவது யாது?

[ஹோமியோபதி அற்புதங்கள்
மேஜர் தி.சா.இராஜூ]

'
மிகவும் சிறப்பு மிக்க தலைப்பு வாசகம். இதை லியோ டால்ஸ்டாயிடமிருந்து கடன் வாங்கிக் கொள்ளுகிறேன். லியோ டால்ஸ்டாயின் பெயரை எழுதும்போது அவருடைய கருத்துகள் பொது உடைமைத் தத்துவத்திற்கு மலர்ச்சி தர எவ்வளவு தொலைவு பயன்பட்டன என்றும் எண்ணிப் பார்க்கிறேன்.
'
‘பிறந்த வீட்டின் பெருமையை உடன் பிறந்தவனிடம் பீற்றிக் கொள்வது போல’ என்று ஒரு பழமொழியுண்டு ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை’.
'
ஹோமியோபதி மருத்துவம் விஞ்ஞானபூர்வமானது, உறுதியாக நிவாரணம் அளிக்கக் கூடியது என்று நமக்குள்ளே புகழ்ந்து பேசிக் கொள்வதில் சிறப்பு ஏதும் இல்லை. மாற்றுக் கருத்து உடையவர்களையும் இத்துறைக்கு ஈர்க்க வேண்டும். அந்தத் துறையில் ‘அப்ரோச்’[ASSOCIATION FOR PROPAGATION OF CLASSICAL HOMOEOPATHY] Aproch Classical Homoeopathy தூய ஹோமியோபதி பிரச்சார சங்கம் -இன் பணி மகத்தானது.
‘மர்த்தனம் குண வர்த்தனம்’ ‘விஷம் விஷஸ்ய சமனம்’ (நீர்ப்பதனாலும், கடைவதனாலும் ஒரு பொருளின் ஆற்றல் அதிகமாகிறது. நஞ்சே நஞ்சுக்கு முறிவு) என்ற பரிவுரைகள் ஆயுர்வேதக் கோட்பாடுகள்.
அண்மையில் ஒரு சித்த மருத்துவ நிபுணரைச் சந்தித்து உரையாடினேன். அவர் கூறுகையில் போகர் என்ற சித்த மருத்துவர் சீன நாட்டிற்கும் சென்று திரும்பியவர், அவருடைய சமாதி பழனி மலையில் உள்ளது.
பழனியில் உள்ள பாலமுருகனின் திருவுருவம் நவபாஷாணத்தில ஆனது. சிலையில் உள்ளவை கந்தகம், பாதரஸம், ஆர்ஸனிகம், சயனேடு, சோடியம் ஆகியவற்றின் கூட்டு. இந்தச் சிலையின் மேல் தேன், நெய், வெல்லம், பழங்கள் ஆகியவற்றின் கலவையைச் சார்த்தி பிறகு அதை எடுத்து அன்பர்களுக்கு வழங்குகிறார்கள். பஞ்சாமிதத்தைத் தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டவர்களின் உடல் தொல்லைகள் பல நீங்கி விடுகின்றன என்பது கண்கூடு என்று அவர் கூறினார்.
இது ஹோமியோபதி அல்லாமல் வேறு என்ன? என்று நான் வினவினேன். சிறிது நேரம் விவாதித்த பிறகு அவர் அதை ஏற்றுக் கொண்டார். மருத்துவ அறிவின் எல்லைப் புள்ளியைத் தொட்ட சித்தர்களுக்கு அந்த ஹோமியோபதி முறையும் புரிந்திருக்கிறது என்பது தெளிவு என்று அவர் ஒத்துக் கொண்டார்.
.
ஆனால் மனக்குறிகளுக்கு வேறு எந்த மருத்துவ முறையாவது இவ்வளவு சிறப்பிடம் தருகிறதா என்பது ஒரு பெரிய கேள்வி.
.

ஒரு துயரர் சரிதை:

.
பல ஆண்டுகளாக, சுவாசக் குழல் கோளாறுகளினால் தொல்லையுற்று வந்த பேராசிரியர் என்னிடம் வந்தார். ஸைனஸைடிஸ், டான்ஸிலைடிஸ், ஃபாரஞ்சைடிஸ், லாரஞ்சைடிஸ், ப்ராங்கைடிஸ் என்று பெயரிட்டு பல காது, மூக்குத் தொண்டை மருத்துவ நிபுணர்கள் அவருக்கு மருந்து கொடுத்துப் பரிசோதித்திருக்கிறார்கள். மூக்கிற்கு மேல் துளையிட்டு சிகிச்சை அளித்திருக்கிறார்கள். இவருக்கு எந்த சிகிச்சை முறையும் பலன் தரவில்லை. தும்மல், இருமல், மூக்கடைப்பு என்று வாழ்நாள் முழுவதும் தொல்லை. அவர் தமது துயரங்களை விவரித்துக் கொண்டே போனார். நான் வென்னீரிலே குளிக்கிறேன். குடிப்பதும் அதுவே தான்.
.
நான் வழக்கமாக நோயாளிகளைப் பார்க்கும் நேரத்திற்குப் பின்னால் அவர் வந்திருந்தார். ஏன் இவ்வளவு தாமதம் என்று அவரைக் கேட்டேன். இந்த நேரம் வரை எமகண்டம் என்று விடையறுத்தார். அவருடைய பெயர் மதிஒளி, ஒரு கல்லூரியில் இயற்பியல் போதிக்கிறார்.
நான் அதிகம் யோசிக்கவில்லை. கோனியம் மாக்குலேட்டம்-இரு மாத்திரைகள்-முப்பதாவது வீரியத்தில் தொடர் மருந்தாக இரு சீனி உருண்டைப் பொட்டலங்கள்.
‘காலையில் வெறும் வயிற்றில் வாயை நன்றாகக் கொப்பளித்த பிறகு’
அவர் மூன்று நாள் பொறுத்து வந்தார். முதல் பொட்டலம் உண்ட அன்ற ஒரே தும்மல், மூக்கொழுதல், இரவு மூக்கடைப்பு. இரண்டாவது மூன்றாவது மருந்துகள் (?) அவற்றைக் குணப்படுத்தி விட்டன. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை குளிர்ந்த நீரில் குளித்தேன்.
தொடர்பாக நான் கொடுத்தது அதே மருந்தின் இரண்டு மாத்திரைகள்-வீரியம் இருநூறு.
.
பல மாதங்களுக்குப் பிறகு ஓர் இலக்கியப் பேரவையில் அவரைச் சந்தித்தேன். அவர் என் கைகளைப் பற்றிக் கொண்டார். அய்யா, தற்போது எனக்கு எந்தத் தொல்லையுமில்லை. எல்லாமே குளிர்ந்த நீர்தான். முன்பெல்லாம் அதைத் தொட்டாலே தும்மல் ஏற்படும். நான் மீண்டும் வந்து உங்களைச் சந்திக்காதது என்னுடைய குற்றம் தான்.
கவலை வேண்டாம். இயேசுபிரான் எழுவரைக் குணப்படுத்தினார். அவர்களில் ஒருவர் மட்டுமே தேவகுமாரனுக்கு நன்றி கூறினார் என்று கார்னிஜி எழுதுகிறார்.
 .
ஹோமியோபதி மருத்துவர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளைப் பொருட்படுத்துவதே கிடையாது.
அந்த அன்பருக்கு நான் அந்த மருந்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் ஜே.டி. கெண்டின் ரெப்பர்ட்டரி, பக்கம் 85 (மூட நம்பிக்கை) SUPERSITIOUS -இக்கு கோனியம் மாக்குலேட்டம்தான் மருந்து என்பது அவருடைய கருத்து.
.
‘பொய்யுரையேன், சத்தியமே புகல்வேன்’ என்று வள்ளலாரைப் போல அடித்துப் பேசுகிறேன் இந்த மருத்துவமுறை மட்டுமே முழு நிவாரணம் தர முடியும். ஆகவே விரிவஞ்சி விடுகிறேன்.
.
"இனி நாம் செய்ய வேண்டுவது யாது?"
நோய்க் குறிகளைத் தேர்வு செய்யும்போது தவறாமல் மனக்குறிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மனிதன் என்பவன் மட்டுமே ஆறாவது அறிவு படைத்தவன்.
*****
ஹோமியோபதி அற்புதங்கள் நூலில் இருந்து
மேஜர் தி.சா.இராஜூ
***********************************************************************
அற்புதங்கள் தொடரும்.......