Monday 6 March 2017

ஹோமியோபதி அற்புதங்கள் மேஜர் தி.சா.இராஜூ



"ஹோமியோபதி என்றால் என்ன? "
இப்படி ஒரு கேள்வி கூடவே ஒரு ஏளனமான புன்சிரிப்பு. இப்படிக் கேட்பவர் கல்வி பெற்றவர் சமுதாய நடைமுறைகளை அறிந்தவர்.
'
எவரும் யுனானி, சித்த வைத்தியம், ஆயுர்வேதம், அலோபதி ஆகிய முறைகளைப் பற்றி இவ்வாறு கேட்பதில்லை. ஏனென்றால், அந்த முறையாளர்கள் சீறுவார்கள். ஊருக்கு இளைத்தவர் பிள்ளையார் கோயில் ஆண்டி என்று ஒரு பழமொழி உண்டு. இன்று ஏளனத்துக்கு இலக்காகிறவர் ஹோமியோபதி மருத்துவர் மட்டுமே.
'
"உங்களுடைய படி வருமானம் என்ன?"
ஹோமியோபதி மருத்துவர் தம்மிடம் சிகிச்சை பெற வந்துள்ளவரிடம் இவ்வாறு கேட்கிறார். இது நோய்க்கு தொடர்பில்லாத கேள்வி என்ற பொருளில் கேலி செய்றது கல்கியில் வெளிவந்தள்ள கட்டுரை.
'
நோயாளியின் பொருளாதார நிலை என்ன? அவருக்கு அந்தத் துறையில் சிக்கல்கள் உள்ளனவா? அதனால் அவரது மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறதா? அதன் விளைவாக நோய் தோன்றி இருக்கிறதா என்று மருத்துவர் அறிய விரும்புகிறார். பொருளிழப்பினால் மனநிலை பாதிக்கப்பட்டு அதன் காரணமாக நோய் தோன்றக்கூடும். அதற்கு மருந்து ஹோமியோபதித் துறையில் உண்டு என்ற உண்மை மரமண்டைகளுக்குத் தெரியாதுதான். (நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?)
'
இதுவரை ஹோமியோபதி மருத்துவமுறை பற்றி ஐந்து புத்தகங்கள் எழுதிவிட்டேன். அவற்றில் சில மறுமுறையும் பதிக்கப்படுகின்றன. இவற்றை எழுதுவதற்காகத்தான் பல துறை மருத்துவ நூல்களையும் படிக்க வேண்டியிருக்கிறது. ஆனால இவ்வளவையும் படித்த பிறகு வள்ளுவரை ஒத்த ஒரு மருத்துவ மேதையை என்னால் காண முடியவில்லை. பொருட்பாலில் மருந்து என்ற அடிகளில் உள்ள பத்து குறட்பாக்களுள் அற்புதமான பொருட்பாடல்கள்.
'
நோய் நாடி அதன் முதல் நாடி - அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்ப செயல்.
என்றொரு அமுதவாக்கு. 
'
உண்மையாய் தொழில் புரியும் ஹோமியோபதி மருத்துவர் ஒரு நாளைக்கு இருபது நோயாளிகளுக்கு அதிகமாகச் சிகிச்சை அளிக்க இயலாது. 
அதற்குக் காரணம் ஒவ்வொரு நோயாளியும் ஒரு தனி குணச்சித்திரம். ஒரே வீட்டில் மூன்று குழந்தைகள். அவற்றின் நோய்க்குறிகள் ஒரே வகையானவை. ஆனால் மூவருக்கும் வெவ்வேறு மருந்துகள் தர வேண்டியிருந்தது என்று எழுதுகிறார் மருத்துவமேதை நாஷ். சகட்டுமேனிக்கு மருந்து என்ற செய்தியே இந்த மருத்துவ முறையில் கிடையாது.
'
ஆர்னிகா மாண்டென்னா என்ற ஒர் அற்புதமான மருந்து மேதை ஹானிமனால் மெய்ப்பிக்கப்பட்டது. அது பல முறை நிவாரணி. அந்த மருந்து முடிவளர்வதற்கு உதவும் என்று அவர் எங்கேயும் குறிப்பிடவில்லை. அவர் மட்டுமன்று அவருக்குப் பின் வந்த நிபுணர்கள் எவரும் இவ்வாறு கூறவில்லை. ஆனால் நடைமுறை வாழ்வில் என்ன நிகழ்கிறது? பல மருத்துவ நிறுவனங்கள் ஆர்னிகேட்டட் கூந்தல் தைலத்தைக் குறித்து விளம்பரம் செய்கினிறன. விற்பனையும் செய்கிறார்கள்.
எனது இரண்டாவது நூலை குடந்தையிலுள்ள ஒரு மருத்துவ நிறுவனம் வெளியிட்டது. அதில் ஆர்னிகாவைப் பற்றி விளக்கும்போது எல்லாத் துறையிலும் நடக்கும் மோசடிகள் ஹோமியோபதியிலும் புகுந்துவிட்டன. அதற்கு இந்த ஆர்னிகா தைலம் எடுத்துக்காட்டு என்று எழுதியுள்ளேன்.
புத்தகம் வெளியான பிறகு நிறுவன மேலாளர் என்னைக் கேட்டார். ‘நாங்களே இந்த முறையில் விற்பனை செய்கிறோம்.. நீங்கள் இப்படி எழுதிவிட்டீர்களே..’
'
என்னுடைய மறுமொழி
‘நான் உண்மையைக் கூற என்றும் தயங்குவதில்லை’ ஆனால் உண்மை யாருக்கு வேண்டும்?
பல கனிமங்களைக் குறிப்பிட்ட அளவில் கலந்து மேதைகள் மெய்ப்பித்திருக்கிறார்கள். அவைகளைக் குறியினுக்கேற்பத் தருவது நேர்மையான மருத்துவம். 
ஆனால் இன்று நடப்பது என்ன?
ஒவ்வொரு வகை நோய்க்கும் ஒரு கூட்டு மருந்து. இது மெய்ப்பிக்கப்பட்டதா? சத்தியமாக ஆதாரம் இல்லை. 
அந்த நாளில் ஒரு திரைப்பட பாடல் உண்டு.
'
தலைவலிக்கொரு மாத்திரை தடுமனுக்கொரு மாத்திரை, சாப்பாட்டுக்கு முன்னாலே, சாப்பாட்டுக்கு பின்னாலே..
'
இது அலோபதி மருந்துகளை ஏளனம் செய்த புகழ்பெற்ற பாடல். அந்த நிலைக்குத் நாமும் தள்ளப்பட்டுவிட்டோமே? இது நியாயமா? தருமந்தானா?
'
என்னிடம் ஒர் இஸ்லாமிய அன்பர் வந்தார்.
‘என் மனைவிக்கு நெடுநாளாக இருமல், சளி, இழுப்பு அதற்கு மருந்து வேண்டும்’
'
நோயாளியை ஒரு முறை நேரில் பார்த்து விவரங்களைப் பதிவு செய்தபிறகே என்னால் உதவ முடியும் - எனது மறுமொழி.
'
மறுநாள் தமது மனைவியுடன் வருகிறார். அந்த மங்கையை உடல்நிலை குறித்துக் கேள்வி கேட்டேன். அவளால் பதில் சொல்லவே இயலவில்லை. துண்டு துண்டாக வார்த்தைகள். அதுவும் விளங்காத உளறல்.
'
‘இப்படி எவ்வளவு நாளாக இருக்கிறது?’
'
‘சிறுபிள்ளையிலிருந்தே.’
'
‘என்ன காரணம்?’
'
‘வாய் பேச முடியாத தோழி இவளுக்கு உண்டு. அவளுடன் பழகியதால் இந்த நிலை’.
'
என்னால் இதை ஏற்க முடியவில்லை. வாய் பேசாதவர்கள் என்று எவரும் கிடையாது. செவி கேளாததனால்தான் நாவு இயங்க்hமல் போனது. இவரை காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் காட்டி மருந்து கொடுத்தோம். பலன் இல்லை. கணவர் தெரிவித்தார்.
'
ஹோமியோபதியில் சிறுவயதிலிருந்தே பேச்சில் குறைபாடுடன் உள்ளவர்களுக்கென்று ஒரு மருந்து உண்டு. அதை மூன்றாவது வீரியத்துடன் நான்கு பொட்டலங்கள் கொடுத்தேன். (மருந்தின் பெயரை மருத்து வாசகர்களின் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன்).
'
ஒரு வாரம் பொறுத்து அந்த அன்பர் மீண்டும் வந்தார்.
'
‘அதிசயம் அய்யா’
'
‘சொல்லுங்கள்’
'
‘இது புனிதமான ரமலான் மாதம். எங்கள் ஊரில் விடியற்காலை மூன்று மணிக்கு தெருவில் நகாடா வாசித்து யாவரையும் துயில் எழுப்பும் வழக்கம் உண்டு. நீங்கள் மருந்து கொடுத்த இரண்டாம் நாள் என் மனைவி என்னை உறக்கத்திலிருந்து எழுப்பினாள். நகாடா அறைகிறதே கேட்கவில்லையா? தொழுகைக்கு தயார் ஆக வேண்டுமே. எனக்கு உடல் புல்லரித்துப் போயிற்று. இத்தனை ஆண்டுகளாக இதுநாள் வரையில் தம்பட்டம் ஒலித்துள்ளது. அதை அவள் செவியுற்றதேஇல்லை. இன்று தெளிவாகக் கேட்டிருக்கிறாள். மேலும் தற்போது குழறாமல் பல சொற்களை உச்சரிக்கிறாள், உங்களுக்கு எப்படி நன்றி செலுத்துவதென்றே புரியவில்லை?
'
‘எனக்கு நன்றி சொல்ல வேண்டாம். அது மேதை ஹானிமனுக்கு உரித்தாகும்’ அடக்கமாய்ப் பதிலிறுத்தேன்.
'
‘மூங்கையான் பேசலுற்றான்’ என்ற சொற்றொடரைக் கம்ப நாடன் உரைக்கின்றான். ‘மூகம் கரோதி வாசாலம்’ என்று தியான சுலோகம் பேசும். இத்தகைய பேரதிசயங்கள் ஹோமியோபதி மருத்துவத் துறையில் மட்டுமே நிகழக்கூடும். சுரப்பிகளே இயங்காத நிலையில் உள்ள மந்தமான சிறுவனுக்கு வியர்வைச் சுரப்பிகளை ஊக்கி வைத்து எல்லோரையும் வியக்கச் செய்தவர் மருத்துவ மேதை த.சா.ராசாமணி அவர்கள்.
இந்த வாய்ப்புகளை வெளியிடத்தான் எந்த நாளேட்டிலும் இடமில்லை. 
‘பூவிலே உயர்ந்த பூ? என்று கவிதை பாடத்தான் அவர்களுக்குத் தெரியும்.
'
இந்த நிலைக்கு நமது முந்தைய மருத்துவர்களையும்தான் குறை கூறுவேன். அவர்கள் ஆழ்ந்து படிப்பதில்லை. சிந்திப்பதில்லை, விவாதிப்பதும் இல்லை. தெளிவான, பயனுள்ள எண்ணங்களைப் பரப்ப நம்மிடையே நல்ல ஏடுகளும் இல்லை.
'
மிகினும், குறையினும் துயர் செய்யும் என்றும் 
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு 
என்று துணிவுடன் வரைந்த வள்ளுவப் பெருந்தகைக்கு நன்றி கூறுகிறேன்.
'
'
***
ஹோமியோபதி அற்புதங்கள் 
புத்தகத்திலிருந்து
***********
மேஜர் தி.சா.இராஜூவின் அற்புதங்கள் தொடரும்............

No comments:

Post a Comment