Tuesday 7 March 2017

ஹோமியோபதி முறையில் தடுப்பு மருந்துகள்

மேஜர் தி.சா.இராஜூ

'
எல்லாப் பொருளையுமே உள்ளடக்கிய நமது திருக்குறளில் மருந்து என்ற தலைப்பில் பத்துப்பாக்கள் உள்ளன. இவை மருத்துவ சாத்திரத்திற்கே ஆதாரமாகும்.
நோய்த் தடுப்பு முறைகள் குறித்தும் ஒரு குறள் அதில் உள்ளது. அது,
'
நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்பதாகும்.
'
முதன்மையாக ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படைக கொள்கையைப் புரிந்து கொள்ள வேண்டும். மனித உடலில் ஜீவசக்தி ( VITAL FORCE) என ஒன்று உள்ளது. அது நலிவுறும்போது பல குறிகளை வெளிப்படையாகக் காட்டுகிறது. அந்தக் குறியையே நோய் என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். இந்த நோய் பாரம்பரியத்தினாலும், தவறான உணவை உட்கொள்ளுதல் மூலமும், சூழ்நிலையினாலும் ஏற்படக்கூடும்.
'
சூழ்நிலை என்பது, கால வேறுபாட்டினாலும், எளிதில் பரவக்கூடிய நோயுள்ளவர்கள் வாழும் இடத்தில் வசிப்பதாலும், பணிபுரிவதாலும், தூய்மை குறைந்த நீரையும், காற்றையும் துய்ப்பதாலும் அமையும். இதைத் தடுப்பதற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் இணையற்ற, பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாத மருந்துகள் உள. அந்த நோய்களின் வாய்நாடி வாய்ப்பச் செயல் புரிய வேண்டும்.
'

தடுப்பூசி சரியா?

உயிருள்ள அம்மைக்கிருமியை இவ்வகையில் உடலில் ஏற்றுவதனால் பல நோய்கள் விளையக்கூடும். அதற்கு ஆட்பட்டவனுடைய உடற்கூறே கெடும் என்று பல நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இந்த வழக்கம் இன்று வரை மாறவே இல்லை. அம்மை தடுப்பூசி குத்துவதினால் ஏற்படும் பின்விளைவுகள் பல… அதற்குப் பிறகு அவன் குணமடைவதே இல்லை.
இந்த தடுப்பூசியினால் அம்மை நோயை அழித்து விட்டோம் என்று மார்தட்டுகிறார்கள். ஆனால் இந்த நோய் மாற்றுருவம் கொண்டு புற்றுநோயாக வெளிப்படுகிறது என்று என் ஆசான் மருத்துவர் சேஷாச்சாரி பல மருத்துவ ஏடுகளில் ஆதாரபூர்வமாக எழுதினார்.
'
அம்மை
உதாரணமாக, அண்டை வீட்டின் ஒரு குழந்தைக்கு சின்னம்மை கண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நோய் பிற இல்லங்களுக்கும் பரவாமல் தடுப்பதற்கு ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. அவை முறையே ஆண்டிமோனியம் க்ரூடம், ( ANTIMONIUM CRUDUM) பல்ஸட்டிலா, ( PULSATILLA) மெர்க்யூரியஸ்,(MERCURIUS ) ரஸ்டாக்ஸ் ( RHUS TOX) ஆகியவையாகும்.
இவற்றினுள் உடனடியாக நிவாரணம் தரக்கூடியது எது என்று ஒரு மருத்துவன் தனது அனுபவத்தின் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பெரும்பாலான நேரங்களில் ஆண்டிமோனியம் க்ரூடம் எனக்கு நல்ல பயனை அளித்திருக்கிறது. ஆண்டமனி என்ற கனிமத்தைப் பொடித்து நீர்த்து, வீரியமூட்டி இது தயாரிக்கப்படுகிறது. சாதாரணமாக முப்பதாவது வீரியமே போதும். தேவைப்பட்டால் சைலீஷியா (SILICEA) என்ற தொடர் மருந்தையும் நோய்வாய்ப்பட்டிருக்கும் குழந்தைக்குத் தரலாம். அது வியாதியின் கடுமையைக் குறைக்கும்.
'
வாந்தி பேதி - திருவிழாக் காலங்களில் சுற்றுப் புறத்தின் தூய்மை குறைகிறது. அதன் விளைவாக வாந்திபேதி பரவுவது வழக்கம். இது எளிதில் பிறரையும் தொற்றிக் கொள்ளும். இதற்கு மிகச் சிறந்த மருந் காம்ஃபரா ( CAMPHORA). இது கற்பூரத்திலிருந்து வீரியப்படுத்தப்பட்டது. நமது ஆலயங்களில் கற்பூர ஒளி காட்டுவதும், நீரில் கற்பூரத்தைக் கரைத்துப் பிரசாதமாக வழங்குவதும், வாந்தி, பேதி பரவக்கூடாது என்ற நல்லெண்ணத்தினால்தான். இன்னொரு மருந்து குப்ரம் (CUPRUM MET) செம்பு, செம்பினாலான நாய்க்காசு, தாயத்து, கட்டைக் காப்பு ஆகியவற்றை அணிந்தாலும் போதுமானது. உடலில் செம்புபடுவதனால் காலரா தடுப்பு மட்டுமல்ல, காக்கை வலிப்பு நோயையும் அது குணப்படுத்துகிறது என்பது எனது அனுபவம். மாவாகத் தின்றாலும், பணியாரமாகும் ஒரு விந்தையை மருத்துவத்துறையில் கண்டிருக்கிறேன்.
'
தாளம்மை - சாதாரணமாக நாம் காண்பது பொன்னுக்கு வீங்கி என்ற கண்ட அழற்சி (mumps) தாடையில் ஒரு புறம் வீங்கி விடும். சளி, கடும் காய்ச்சல், தலைவலி, இருமல் ஆகியவை ஏற்படும். வெகு விரைவில் பரவித் தொல்லை கொடுக்கும் நோய்களில் இதுவும் ஒன்று. அப்போதெல்லாம் குழந்தைக்கு ஒரு பொன் சங்கிலியை அணிவிப்பார்கள். தங்கள் விற்கும் விலையில் நாம் எத்தனை குழந்தைகளுக்குப் பொற் சங்கலியைத் தர முடியும்?
தங்கத்தையை உரைத்து வீரியப்படுத்திய ஆரம்மெட்டாலிக்கம் (aurum met) என்ற ஹோமியோபதி மருந்து முப்பதாவது ஆற்றலிலேயே சிறந்த தடுப்பு மருந்தாக விளங்கும். ஆரம் என்ற லத்தீன் மொழிச் சொல்லுக்கு தங்கம் என்பதுதான் பொருள். பிலோகாரபைன் ( pilocarbine), மெர்க்யூரியஸ், (mercurius) பாராடோடினம் (parotidinum) ஆகிய மருந்துகளும் சிறந்த பயன் தருவதைக் கண்டிருக்கிறேன். தடுப்பு மருந்துகளைத் தேர்ந்தெடுக்கும்போது நோயாளிகளின் மன, உடல் இயல்புகளைக் கருத்தில் கொள்வது விரைவில் நிவாரணமளிக்க உதவி செய்யும்.
'
கக்குவான் இருமல் - கக்குவான் இருமல் ( whooping cough) என்பது ஒரு கொடிய நோய். இது குழந்தையை உருமாற்றிக் குலைத்து விடும். அதுபடும் துயரத்தைக் கண்டு பரிதாபப்பட வேண்டிய நிலைமை தோன்றும். குழந்தை இருமி, இருமி உண்டதை எல்லாம் வாந்தி எடுத்துவிடும்.
எந்த இருமலுக்குமே ட்ரொசேரா (drosera) நல்ல மருந்து. ஆறாவது வீரியமே போதும். இது ஒரு செடியின் சாறு, தொடர்ந்து கொரேலியம் ( corollium rubrum) என்ற நற்பவளமும் பெர்ட்டூசின் (pertussin) என்ற நோய்க் கழிவுப் பொருளும் நல்ல ஔடதங்களாக அமையும். இவை அனைத்துமே முப்பதாவது வீரியத்தில் பயன்தரக் கூடியவை. கக்குவான் இருமலை இந்த மூன்று மருந்துகளின் துணை கொண்டே குணப்படுத்திவிடுவது சாத்தியம். வராமலும் தடுக்கலாம்.
'
முறைக்காய்ச்சல் - மலேரியாவைப் போன்ற முறைக்காய்ச்சல்களுக்கு சில நல்ல தடுப்பு மருந்துகள் ஹோமியோபதி முறையில் உள்ளன. காய்ச்சலின்போது குளிர் இருக்குமானால் நக்ஸ்வாமிகா ( nux vomica) காலை ஒன்பது மணிக்கு ஜுரம் வருவதானால் நாட்ரம் ம்யூர் ( natrum mur) நடுப்பகல் அல்லது நள்ளிரவானால் ஆர்சனிக்கம் ஆல்பம்,[arsenicum album] பதினோரு மணிக்கென்றால் கந்தகம் (sulphur) ஒரு கவனமுள்ள மருத்துவன் நோய் தோன்றும், மிகுதியாகும் அல்லது தணியும் நேரத்தையும் முறைக்காய்ச்சல் விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
'
சொறி, சிரங்கு - ஒரு குழந்தையின் பெற்றோர்களுக்குத் தோல் சம்பந்தமான நோய் அல்லது குழந்தையை உண்டாகியிருக்கும் தாய் பல வகை மருந்துகளை உட்கொண்டுடிருந்தாலோ, அதற்குக் கந்தகம் (sulphur) என்ற நிவாரணியின் ஒரு சிற்றுருண்டையே போதுமானது என்பது மேதைகளின் அனுபவக் கணிப்பு. குழந்தை பிறந்த ஓரிரண்டு வாரங்களுக்குள் அந்தக் கந்தகக் கரைசலின் ஒரு சொட்டு குழந்தைக்குக் கொடுக்கப்படுமானால், அது எந்தத் தோல் வியாதியிலிருந்தும் பாதுகாக்கப்படும் என்று மருத்துவ மேதை லிப்பே குறிப்பிடுகிறார்.
 '
வெப்பத் தாக்குதல் (sunstroke)- நமது நாடு வெப்பம் மிகுந்தது. சூரிய உஷ்ணத்தில் அலைந்து பணிபுரிய வேண்டிய கட்டாயம் பலருக்கு இருக்கிறது. சூரிய ஒளி உடலுக்கு நன்மை தருவதானாலும், அதன் வெப்பம் பலருக்கு நோயை விளைவிக்கக்கூடும். முகம் சிவந்து, தலைசுற்றி, நாவரண்ட நிலை பெரும்பாலோருக்கு ஏற்படும் அப்போதெல்லாம் க்ளோனைன் அல்லது பெல்லடோனா உடனடியாக பலனைத் தரும். சிறப்பாக, நெருப்பினடியில் பணிபுரியும் நிர்ப்பந்தமுடைய கருமான் போன்ற கைவினைஞர்களுக்கு இந்த மருந்து தடுப்பாகவும், நிவாரணியாகவும் பயனளிப்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
அடுப்படியில் நெடுநேரம் பணிபுரியும் சமையர்காரர் ஒருவருக்கு நீர்க்கடுப்பு வந்தது. சிறு நீரிலும் உதிரம் கலந்திருந்தது. அவர் ஓடோடி வந்தார். தொழில் முறையில் அவருக்கிருந்த நிர்ப்பந்தத்தை உணர்ந்து அவரை ஓய்வெடுத்துக் கொள்ளும்படி செய்தேன். ஒரே வேளை மருந்து க்ளோனைன் அவரைக் குணப்படுத்தி விட்டது. இதை நைட்ரோ கிளிசரின் என்றும் சொல்வார்கள். க்ளிசரின், ஆக்ஸிஜன், நைட்ரஜன் ஆகியவைகளின் கலப்பு இது. வெய்யிலில் அலைந்து பணிபுரிய வேண்டிய நிர்ப்பந்தமுடையவர்களுக்கு க்ளோனைன் ஒரு சிறந்த தடுப்பு மருந்து என்பது எனது அனுபவம்.
'
ஹோமியோபதித் தத்துவத்தின் தந்தை எனப்படும் டாக்டர் ஹானிமன் ஆர்கனான் என்ற தமது நூலின் முதல் பக்கத்திலேயே குறிப்பிடுகிறார்.
 மருத்துவரின் தலையாய ஒரே கடமை நோயாளியைக் குணப்படுத்துவதாகும். இதை விரைவாக, பக்க விளைவுகள் ஏற்படுத்தாமல், நிரந்தரமான பலன் தரும் வகையில் செய்தல் வேண்டும்.
இந்தப் பணியைச் செம்மையாகப் புரிவதற்கு அவன் நோயாளியின் குறிகள், அதற்கேற்ற மருந்து, அதைத் தர வேண்டிய நேரம் அனைத்தையும் சீர்தூக்கி செயல்படுதல் வேண்டும். இதோ நமது தமிழ்மறை பேசுகிறது.
'
உற்றான் அளவும், பிணியளவும், காலமும்
கற்றான் கருதிச் செயல்

தெய்வ வள்ளுவன் சமுதாயப் பிணிகளுக்கு மட்டுமல்ல, உடலைத் துன்புறுத்தும் நோய்களுக்கும் உற்ற மருத்துவராக விளங்குகிறார் என்ற பேருண்மையை வலியுறுத்த வாய்ப்பளித்த நல்லோர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
*****
ஹோமியோபதி அற்புதங்கள் நூலில் இருந்து
***************************************************************
அற்புதங்கள் தொடரும்
********************************************************